Friday, September 11, 2009

தாமரைக் கண்ணான் உலகு!

தாமரைக் கண்ணான் உலகு



தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு – திருக்குறள் (1103)

(புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் உள்ளது)

அகத்திய குழுமத்தில் எழுதும் போது இக்குறள்ப் பற்றி விவாதிக்கப்பட்டது. குறளின் சமயத்தை இக்குறளில் ஏன் தேடுகிறார்கள் என்று நினைத்துச் சிரித்ததுண்டு :-)

நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து ”தாமரைக் கண்ணான் உலகு” பற்றிச் சொல்ல சொன்னார். ஏதோ ஒரு யாஹீ குழுமத்தில் மடலாடல் நடந்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் அப்படித்தான்! திடீரென்று கைப்பேசியில் அழைப்பார். ஏதாவது கேட்பார்? எங்காவது எழுதுகிறீர்களா? என்றால் சிரித்துவிட்டு கட் செய்து விடுவார்.


உரையாசிரியர்களின் பார்வை:

மணக்குடவர் உரை:

தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம்.
இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர் உரை:

தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.


(அப்பா! எப்படியெல்லாம் மழுப்புகிறார் ;-)

சமணம் சார்ந்த உரை

யான் முன்னமே சொல்லியது போல (என் மற்ற கட்டுரையைப் படிக்கவும்) மணக்குடவர் உரை சுருக்கமும், நேரிதின் பொருளும் கொண்டதாகயிருக்கிறது.

இந்திரன் உலகு


சமணக் கொள்கைப்படி, நல்வினைக்கட்டால் தேவக்கதியை அடைந்த உயிர்கள் தேவலோகத்தில் தேவர்களாக பிறந்து பலத்தரப்பட்ட சுகங்களையும் அனுபவிக்கும். அச்சுகங்களை எழுத்தில் சொல்ல முடியாது. :-) இது நிற்க!

புணர்ச்சியில் மகிழும் தலைவன், இவள் உடலைத் தழுவதால் கிட்டும் சுகத்தை விட சுவர்க்கத்தில் கிடைக்கும் சுகம் இனிதாக இருக்க முடியுமோ? முடியாது! என்று நினைக்கிறான்.


இப்போது சொல்லுங்கள் சுவர்க்கம் என்றால் அது இந்திரலோகமா? அல்லது திருமால் உறையும் வைகுண்டமா? நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

வைகுண்டத்தில் ”சுவர்க்கத்துக்கு” இடம் உண்டென்றால், அது தாமரைக் கண்ணான் உலகு தான்!! ;-)

உரையின்மையா?

பரிமேலழகர் “தாமரைக் கண்ணான்” என்ற பெயர் இந்திரனுக்கு இல்லை என்ற வாதம் இங்கு நிற்காது? எங்கனமெனின், “எண்குணத்தான்”, ”அறவாழி அந்தணன்” போன்ற பெயர்கள் அருகனைக் குறிப்பதாக எல்லா நிகண்டுகளும் கூறுகின்றன? பரிமேலழகர் கூற்றை ஏற்றுக் கொண்டால், இக்கூற்றையும் தான் ஏற்றாக வேண்டும் இல்லையா?! “எண்குணத்தான்” என்ற பெயர் சிவபிரானுக்கு இன்மையினால் தானே சிவபிழம்பு என்று போற்றப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சூடாமணி நிகண்டை மாற்றி எழுத முயன்றார். சிவன் பெயர் தொகுதியில் “எண்குணத்தான்” என்ற பெயரை சேர்க்க முயன்றார்! இந்த ஒரு சான்றே போதும்!
திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள குறட்ப்பாக்கள் அருகனைக் குறிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்!

அன்பர்கள் சிந்திக்கவும்!

திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தன் கட்டுரையில் “தாமரைக் கண்ணான்” இந்திரனைக் குறிக்கின்ற சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார். பார்க்கவும்!

http://www.sishri.org/indran.html



இரா.பானுகுமார்,
சென்னை 44

9 comments:

கோவி.கண்ணன் said...

நண்பர் பானுக்குமார் நலாமா ?

இன்று ஜெமோவின் வலைப் பக்கத்தை மேய்ந்த போது, ஜெமோவின் வலைப் பதிவில் இந்தப் பதிவிற்கான ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டு இருந்ததை அறிந்தேன்.

நீண்ட நாள் சென்று மீண்டும் எழுதி இருக்கிறீர்கள்.

புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை போன்ற அதிகாரங்களே திருக்குறள் வைதீக, இந்து சமயம் சார்ந்தவை அல்ல என்பதை காட்டும் குறள்கள் ஆகும் என்பது என் எண்ணம்.

Banukumar said...

அன்பின் நண்பரே!

வணக்கம். நலம். சொந்த அலுவல் காரணமாக நீண்ட நாள் எழுத முடியவில்லை.

...புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை போன்ற அதிகாரங்களே திருக்குறள் வைதீக, இந்து சமயம் சார்ந்தவை அல்ல என்பதை காட்டும் குறள்கள் ஆகும் என்பது என் எண்ணம்....

நன்றி! இந்த புரிதல் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பலர் தெரிந்தே மறைத்து எழுதுகிறார்கள். என் வலைப்பதிவின் நோக்கமே தமிழ்ச் சமணம் பற்றி இன்றைய தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதே!

இனிமேல் தொடர்ந்து எழுதுவேன்!


இரா.பானுகுமார்,
சென்னை

நா. கணேசன் said...

வாங்க, வாங்க! பானு.

வீட்டில் எல்லாரும் நலமா?

முடிந்தபோது எழுதவும்.

மின்தமிழ் கூகுள் குழுமத்தில் பேச்சு நடக்கிறது.

ஜீவபந்து ஸ்ரீபால் ஒருகட்டுரை - மயிலாப்பூரில் திருவள்ளுவர் சிலை
20-30 வருடங்களுக்கு முன்னால் வைத்தது என்று திரு.வி.க. போன்றோருடன் உறுதிப்படுத்தி
எழுதினார். அதுபற்றி ஒரு கட்டுரை எழுத ஆசை (என் வலைப்பதிவில்).
வேணுகோபால் சர்மா என்ற சினிமா தயாரிப்பாளர் வரைந்தது இன்று வள்ளுவர் கோட்டம், பெங்களூர், குமரி, ... ஆகிவிட்டது. அதற்கு மிக முன்னாலேயே எல்லிஸ் வைத்த தங்கக் காசு சமணமுனி போல் உள்ளது. அவற்றைக் காட்டி எழுதுவேன்.

வள்ளலார் செப்புப் படிமம் (1905) கிடைத்தது தினமணி.காம் ஆன்மீகம்
பகுதியில் உள்ளது. சமண முனிவர் போலச் செய்துள்ளனர் என்று நினைக்கிறேன். பார்த்தபின் எழுதவும்.

நா. கணேசன்

Banukumar said...

அன்புசால் கணேசர் ஐயா,

நீண்ட காலமாகிறது தங்களுடன் பேசி. வீட்டில் எல்லோரும் நலமே.

ஜீவபந்துவின் கட்டுரை அகத்திய ஆவணத்தில் கிடைக்கும் அல்லது ஜைன் வேல்ட் இணையதளத்தில் பதிவிறக்கி கொள்ளலாம்.இல்லையென்றால் நான் அனுப்பி வைக்கட்டுமா? தெரியப்படுத்தவும்.

நண்பரே, அது மின்தமிழ் என்று தெளிவுப்படுத்தினார். நன்றி!

வள்ளலார் செப்பு படிமம் பார்த்தேன். சமண சாயல் தெரிந்தது. இன்னும் பலர் அறிஞர்கள் ஆராய்ந்தால் நன்றமையும்.

இரா.பானுகுமார்,
சென்னை

வினோத் ராஜன் said...

க்ஷேமம்² ஸர்வப்ரஜாநாம்² ப்ரப⁴வது ப³லவாந் தா⁴ர்மிகோ பூ⁴மிபால:।
காலே காலே ச வ்ரு²ஷ்டிம்² விதரது மக⁴வா வ்யாத⁴யோ யாந்து நாஸ²ம்॥
து³ர்பி⁴க்‌ஷம்² சௌரமாரீ க்ஷணமபி ஜக³தாம்² மாஸ்ம பூ⁴ஜ்ஜீவலோகே।
ஜைநேந்த்³ரம்² த⁴ர்மசக்ரம்² ப்ரஸரது ஸததம்² ஸர்வஸௌக்²யப்ரதா³யி॥1॥

க்ஷேமமா ?

:-)

அப்பாடி, இப்பத்தான் உங்களை இங்க விசாரிச்சேன் !

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/6d97b18ab9471b3d/a13ba6b6d128ff20?lnk=gst&q=

அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க..

ஜின சாசனத்தை பற்றி நிறைய எழுதுங்கள்

V

Banukumar said...

அன்பின் வினோத்,

வருக!

நான் பேஷாயிருக்கேன்! :-)

.....அப்பாடி, இப்பத்தான் உங்களை இங்க விசாரிச்சேன் !.....

நான் லேட்டா வந்தாலும் லேடஸ்டா வருவேன்! ;-)

....ஜின சாசனத்தை பற்றி நிறைய எழுதுங்கள்.....

எழுதுகிறேன்! எழுதுவேன்!!

இரா.பானுகுமார்,
சென்னை

சிங்கப்பூர் தமிழ் ஜைன சமூகம் said...

அன்புநிறை பானுகுமார்,
வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் இணைய/இனிய பதிவை கண்டேன். மிக அருமை. தங்களின் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பினால் நலம்.

அன்புடன்
த.வர்த்தமானன்,
சிங்கப்பூர்.
d.varthamanan@gmail.com

prince said...

நிச்சயம் வைகுண்டமும் இல்லை இந்திர லோகமும் இல்லை என்பது என் எண்ணம்.
ஏனென்றால் நல்ல கதி எய்தும் ஆன்மாக்கள் சுவர்க்கம் சேர்ந்து எத்துன்பமும் / துன்பமே இல்லாமல் வாழும் ஓரிடத்தை சேரும்(சொர்க்கம்)
என்று இந்து மதத்தில் போதிக்கப்பட்டிருக்கிறேன்.
இந்திரலோகத்தில் அவர்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளது(வருணன் - மழை) அது போல்.
ஆனால் சொர்க்கம் only enjoyment
இந்த அர்த்தத்தில் தான் நான் பழகி இருக்கிறேன்.
உங்கள் குறள் விளக்கம் மிகப் பொருத்தம்
அதாவது - இந்த மங்கையின் மென் தோளில் காணும் சுகத்தை விட அந்த சொர்க்க லோக சுகம் என்று சொல்கிறார்களே அது மிஞ்சி இருக்க முடியுமா?முடியாது.
சந்திப்பின் மகிழ்வில்
ராஜ்குமார்

Banukumar said...

நன்றி இராஜ்குமார்,

தங்கள் கருத்துக்கு நன்றி!

இரா.பா